20 ஆண்டுக்கு முன் மாயமான பெண்; பாக்.,கில் வசிப்பதை கண்டுபிடித்த மகள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் துபாய்க்கு சென்ற பெண் ஒருவர் மாயமானார். அவரை தேடி வந்த மகள், தற்போது தாயார் பாகிஸ்தானில் வசித்து வருவதை சமூக வலைதளம் மூலம் கண்டறிந்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ஹமிதா பானு. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சமையல் வேலைக்காக துபாய் சென்றுள்ளார். சிறிது நாட்களில் அவர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை. அவரை கண்டுபிடிக்க குடும்பத்தினர் பல முறை முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில், ஹமீதா பானு பாகிஸ்தானில் வசித்து வருவது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சமூக வலைதள கணக்கு மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஹமீதா பானுவின் மகள் யாஷ்மின் ஷேக் கூறியதாவது: எனது தாயார் 2 அல்லது 4 ஆண்டு இடைவெளியில் துபாய் சென்று வருவது வழக்கம். கடைசியாக ஏஜென்ட் ஒருவர் உதவியுடன் துபாய் சென்றவர் திரும்பி வரவில்லை. அவரை கண்டுபிடிக்க நாங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வீணானது. அவர் துபாய் சென்றதற்கான ஆதாரம் ஏதும் இல்லாததால், போலீசில் புகார் அளிக்க முடியவில்லை. இது குறித்து ஏஜென்ட்டை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், தாயார் எங்களை சந்திக்கவும், பேசவும் விரும்பவில்லை. துபாயில் நலமுடன் உள்ளார். உண்மையை வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்றார். சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ மூலம் தான் தாயார் பாகிஸ்தானில் வசிப்பது தெரியவந்தது. இல்லாவிடில், அவர் துபாய் அல்லது சவுதியில் தான் எங்கோ இருப்பார் என நினைத்து கொண்டிருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

latest tamil news

ஹமீதா பானுவின் சகோதரி ஷகிதா கூறுகையில், ஹமீதா தனது கணவர், சகோதரிகள் மற்றும் வீடு இருந்த பகுதியை சரியாக கூறியதை வைத்து அவரை கண்டுபிடித்தோம். முன்பு சகோதரியை கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தோம். ஏஜென்ட்டை தொடர்பு கொண்டோம். சிறிது நாட்களில் அவர் மாயமானார். அவரை மீண்டும் பார்ப்போம் என நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.