கருணாநிதிக்கு பாளையங்கோட்டை சிறையில் நினைவுச் சின்னம்

பாளையங்கோட்டை

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாளையங்கோட்டை சிறையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது.

இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு வந்தார். அவர் சிறைச்சாலையை ஆய்வு செய்தார். அப்போது அவர் சிறையில் கைதிகளின் அறைகள், உணவுக் கூடம், கைதிகள் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் கூடம், விவசாய நிலங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டு அடிப்படை வசதிகள், தேவையான வசதிகள் குறித்தும் சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம்,”முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டேன். இங்கு விசாரணை கைதி, தண்டனைக் கைதி என மொத்தம் 1,378 கைதிகள் உள்ளனர்.  இங்கு 1,332 கைதிகளுக்குத்தான் இடம் உள்ளது. கூடுதலாகவே கைதிகள் உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் சிறைகள் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவில் நவீன வசதியுடன் இருக்க வேண்டும். திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைக்க வேண்டும். கைதிகளுக்குத் தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.  எனவே நவீன வசதியுடன் பல இடங்களில் சிறைச்சாலைகளில் புதிய கட்டிகளாகக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இங்கு இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் குறைவாக உள்ளதால் அந்த பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் இருந்த பகுதியைப் பார்வையிட்டோம். அவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் இருந்த பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் முதல்-அமைச்சர் அனுமதியுடன் நினைவுச் சின்னம் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.