புதுடெல்லி: மாநிலங்களவையில் ‘சுகாதார உரிமை மசோதா 2021’ என்ற தனிநபர் மசோதா மீது நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. அப்போது, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதில் அளித்து பேசும்போது, “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மையங்களை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இப்போது 1.22 லட்சம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் மாதத்துக்குள் 1.5 லட்சம் மையங்களும் செயல்பாட்டுக்கு வரும்.
இந்த மையங்களில் மார்பக, வாய் உள்ளிட்ட 3 வகை புற்றுநோய்கள் மற்றும் 13 தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஏழைகளுக்கும் சுகாதார வசதி எளிதாக கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார்.