இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் நாளை உயர் நீதிமன்றம் விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், “கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “தனி நீதிபதி தனது அதிகாரத்தின் வரம்பை மீறி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இந்த வழக்கில் கோரிக்கையே ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்பதுதான், எனவே, ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்று தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பது தவறு.

பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்துதான் கூட்ட வேண்டும். எதிர்காலத்தில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தனிநீதிபதி உத்தரவிட்டுள்ளார். அது இயலாத காரியம். நாங்கள் இருவரும் மீண்டும் இணைந்து செயல்படுவதற்கான சூழல் இல்லை. எனவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு, தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கை, தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டிருந்த கூடுதல் மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டனர். அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “இதே போல் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்துள்ள இரண்டு வழக்குகளை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இரண்டு மேல்முறையீட்டு வழக்குகளையும் இதேபோல் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட வேண்டும்” என்று முறையிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மேல் முறையீட்டு வழக்குகள் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக எண்ணிடும் நடைமுறைகள் முடிவுற்றால், அனைத்து வழக்குகளையும் நாளை (ஆக.23) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். இதன்மூலம் நாளை இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.