பேருந்து மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் கிராமத்திற்கு, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த குணசீலன் என்பவர் மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மோனிஷா , ஒன்றரை வயது மகள் மயூரி, சகோதரி நீலாவதி ஆகியோருடன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் குணசீலனின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் நிலைத்தடுமாறி 4 பேரும் சாலையில் விழுந்துள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த பேருந்து சாலையில் விழுந்த மயூரியின் மீது ஏறியுள்ளது. இதில் மயூரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மயூரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் காயமடைந்த குணசீலன், மோனிஷா, நீலாவதி ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.