கோப்ரா திரைப்படத்தின் விளம்பரத்திற்காக நடிகர் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி, மிர்னாலினி மற்றும் மீனாட்சி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் கல்லூரிக்கு வந்திருந்தனர். கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய அவர்கள், மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதனையடுத்து கோவை கொடிசியா அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விக்ரம், இந்த படத்தில் அடிப்படை அருமையாக செதுக்கப் பட்டிருப்பதாகவும் , மாறுபட்ட கதை எனவும் தெரிவித்தார்.
கதாப்பாத்திரம் சொல்லும் போது அதற்கேற்ப மாறுவது தனக்கு பிடிக்கும் என தெரிவித்த விக்ரம், கோப்ரா திரைப்படம் பல்வேறு சவால்களை கடந்து சிரமப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 3 ஆண்டுக்கு பின் திரையரங்கில் படம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குனர் அஜய்க்கு நன்றி என விக்ரம் தெரிவித்தார். மேலும், கடைசி வரை திரைப்படத்தில் நடித்து கொண்டே இருப்பேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.திருச்சி விமான நிலையத்தில் எனது ரசிகர்கள் மீது போலிசார் தாக்குதல் நடத்தியது வருத்தம் அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
சமீப காலமாக வரும் படங்கள் அதிக அளவில் ஹிட் ஆகிறது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் .தொடர்ந்து பேசிய அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கிரிக்கெட்டை விட சினிமாவில் அவர் சிறப்பாக செயல்படுகிறார் எனத் தெரிவித்தார். கோப்ரா படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.