“சரியான விஷயத்துக்காக நிற்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன்!" – குஷ்புவை பாராட்டிய சசி தரூர்

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானோவின் வழக்கில், 15 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவந்த 11 குற்றவாளிகளையும், சுதந்திர தினத்தன்று நன்னடத்தை என்ற பெயரில் குஜராத் அரசு விடுதலை செய்தது. இது பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோ, அவரின் குடும்பத்தினரை உளவியல் ரீதியாக மிகவும் பாதித்தது. மேலும், இந்த விடுதலையைக் கண்டித்து மஹுவா மொய்த்ரா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்தனர்.

குஷ்பு

அந்த வரிசையில் கடந்த 24-ம் தேதியன்று, பா.ஜ.க-வைச் சேர்ந்த குஷ்பு, “பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, வாழ்நாள் முழுதும் அவளின் ஆன்மாவில் ஏற்பட்ட வடுவுக்கும், அந்தப் பெண்ணுக்கும் நீதி கிடைக்க வேண்டும். இதில் ஈடுபட்ட எந்த மனிதனும் விடுதலையாகக் கூடாது. அப்படிச் செய்தால் அது மனித குலத்துக்கும் பெண்மைக்கும் அவமானம். பில்கிஸ் பானோ அல்லது எந்தவொரு பெண்ணுக்கும், அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு ஆதரவு தேவை” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.

காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இத்தகைய கருத்துக்கு குஷ்புவை பாராட்டியிருக்கிறார். இது குறித்து சசி தரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இதில் நீங்கள் வலதுசாரி என்பதைக் காட்டிலும், சரியான விஷயத்துக்காக நிற்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன்” என குஷ்புவின் ட்வீட்டை குறிப்பிட்டு ட்வீட் செய்திருக்கிறார். தற்போது பா.ஜ.க-விலிருக்கும் குஷ்பு, முன்னதாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக, 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது தொடர்பாகக் குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.