டாக்கா: கரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிகளை வழங்கியதற்காகவும் உக்ரைனில் தவித்த மாணவர்களை மீட்க உதவியதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பாராட்டு தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக ஷேக் ஹசீனா இன்று டெல்லி வருகிறார். இதையொட்டி தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:
கரோனா பெருந்தொற்று காலத்தில் வங்கதேசத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசிகளை வழங்கினார். வங்கதேசத்துக்கு மட்டுமன்றி அனைத்து தெற்காசிய நாடுகளுக்கும் தடுப்பூசிகளை அனுப்பினார். இது பேரூதவியாக இருந்தது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உக்ரைன் போரின்போது அந்த நாட்டில் கல்வி பயின்ற வங்கதேச மாணவர்கள் போர் முனையில் சிக்கித் தவித்தனர். இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உதவிக் கரம் நீட்டினார். உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டபோது வங்கதேச மாணவர்களும் மீட்கப்பட்டனர். அவர்கள் பத்திரமாக வங்கதேசம் திரும்பினர். அதற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.