கோவிலுக்குச் சொந்தமான விவசாய பூமியில் எவ்வாறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது? – நீதிமன்றம்

கோவிலுக்குச் சொந்தமான விவசாய இடத்தில் எவ்வாறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது? ஏன உயர் நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்த இந்துஜா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் கிராமத்தில் அருள்மிகு முப்பிடாதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், இக்கோவிலுக்குச் சொந்தமாக பல்வேறு சொத்துக்கள் உள்ள நிலையில், லாலாவிளை கிராமத்தில், இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 50 சென்ட் இடத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த இடத்தில் முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோர் குடிசைகள் அமைத்து தங்கி வந்தனர். தற்போது இந்த இடத்தில் கான்கிரீட் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
image
கோவிலுக்குச் சொந்தமான இந்த இடம் விவசாயத்திற்கென வகை படுத்தப்பட்டுள்ளது. இதில், முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோர் கான்கிரீட் கட்டடத்தை கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இந்து சமய அறநிலையத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் கிராமத்திலுள்ள அருள்மிகு முப்பிடாதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமாக லாலாவிளை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள கான்கிரீட் கட்டட ஆக்கிரமிப்பை அகற்றி பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.’ என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, ‘கோவிலுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் எவ்வாறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பி வழக்கு குறித்து திருநெல்வேலி இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.