180 ரன்கள் நல்ல 'ஸ்கோர்' என்ற மனநிலையில் இருந்து மாறவேண்டும் – தோல்வி குறித்து ரோகித் சர்மா

துபாய்,

ஆசிய கோப்பை 20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், போட்டிக்கு பின் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பேசிய ரோகித் சர்மா, இந்த போட்டி எங்களுக்கு சிறந்த பாடத்தை அளித்துள்ளது. 181 ரன்கள் நல்ல ஸ்கோர் என நான் நினைத்தேன். எந்த மைதானத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் 180 ரன்கள் அடித்தால் அது நல்ல ‘ஸ்கோர்’ என்ற மனநிலையில் இருந்து மாறவேண்டும். பாகிஸ்தான் வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட சிறப்பாக ஆடினர்.

இது மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டி என்பது எங்களுக்கு தெரியும். ரிஸ்வான் மற்றும் நவாஸ் இடையே கூட்டணி நீடித்தபோதும் நாங்கள் பொறுமையாக இருந்தோம். ஆனால், அந்த கூட்டணி சற்று நீண்ட நேரம் நீடித்துவிட்டது. இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். 2-வது இன்னிங்சின் போது மைதானம் சற்று சிறப்பாக இருந்தது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.