ராகுல்காந்தி நடைபயணம் அவருக்கு நல்லதாக அமையும்: செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமி கட்சியில் படிப்படியாக உயர்ந்து, பின்னர் நான்கரை ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அவரை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர் தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். வருங்காலத்தில், பொதுச்செயலாளராகவும் வர உள்ளார்…’’ என்றார். அப்போது, ஓபிஎஸ் சுற்றுப்பயணம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் கோபமடைந்த செல்லூர் ராஜூ ‘‘தேவையில்லாமல் கேட்கிறீர்கள். சும்மா திரும்பத் திரும்ப அதே கேள்வியே கேட்பீர்களா? அதிமுக பற்றியே கேட்பீர்கள் என்றால், இனி பேட்டியே நான் கொடுக்க தேவையில்லை. மற்ற தலைவர்கள் கொடுப்பார்கள்…’’ என கோபத்துடன் கூறினார்.

அப்போது, ராகுல்காந்தி நடைபயணம் குறித்து கேட்டதும் குஷியான செல்லூர் ராஜூ, ‘‘இப்படிக் கேள்வி கேளுங்கப்பா… ராகுல்காந்தி ஒரு இளம்  தலைவர். அவரது தேச ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாக அமையுமா எனத்தெரியவில்லை. ராகுல்காந்திக்கு நல்லபடியாக அமையும் என எதிர்பார்க்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முயற்சி செய்து வருகிறார். அதை நாங்கள் நம்புகிறோம். ’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.