நீர்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்து வருவதால் இன்று முதல் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்துள்ளதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 32 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதேஅளவில் நீடிக்கிறது. நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால் ஒகேனக்கல் காவிரியில் இன்று காலை முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பரிசல் இயக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 40 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இன்று காலையும் நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் மின்நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23,000 கனஅடி வீதமும்,

உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 7,000 கனஅடி வீதமும் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப் பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் நீர்திறப்பு 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.