மதசார்பற்ற சமூகத்தை உருவாக்க விரும்புகிறேன்: இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங்.எம். ராகுல் காந்தி பேச்சு

திருவனந்தபுரம்: சிறந்த தலைவர்களால் மட்டுமே நாட்டை வலுப்படுத்த முடியும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 7வது நாளாக பங்கேற்று நடந்து செல்கின்றனர்.  தற்போது கேரளாவில் பயணத்தில் உள்ளார். இரவு ஓய்வு எடுத்துக்கொண்ட ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வெள்ளையானை சந்திப்பில் இருந்து 7வது நாளாக பயணத்தை தொடங்கினர்.  அங்கு மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல், நாட்டில் சாதி, மத வேறுபாடுகளை களைந்து அன்பு, சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டை கொண்டுவர வேண்டும் என்பதே தனது யாத்திரையின் நோக்கம் என்று கூறினார்.

வளரும் புதிய தலைமுறைக்கு போதிய கல்வியை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினால் போதை பொருட்களுக்கு அடிமையாவதில் இருந்து அவர்களை விடுவிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.  குழந்தைகள், பள்ளி பருவம் முதலே சிறப்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது தான் சிறந்த தலைவர்களாக வர முடியும் என்றும், சிறந்த தலைவர்களால் மட்டுமே நாட்டை வலுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். மதசார்பற்ற சமூகத்தை உருவாக்க விரும்புவதாகவும்  ராகுல் காந்தி குறிப்பிட்டார். கேரளாவில் மட்டும் 18 நாட்களில் 450 கி.மீ. தூரம் வரை ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.