பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம்: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசியதாக, அக்கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக உள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில், பகவந்த் மான் முதலமைச்சராக பதவி வகிக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை, பிராந்தியக் கட்சி என்ற நிலையையும் தாண்டி தேசிய அளவில் காலூன்ற முடிவு செய்து அதற்காக காய்களை நகர்த்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத், ஹிமாச்சல பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

பஞ்சாப் மாநிலத்தில், 10 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக நிர்வாகிகள் அணுகி உள்ளனர். டெல்லியில் மூத்த பாஜக தலைவர்களை சந்திக்க வைப்பதாகவும், கோடி கணக்கில் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அரசுகளை கவிழ்ப்பதையே ஒரு நோக்கமாக கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது. டெல்லியில், ஆப்பரேஷன் லோட்டஸ் திட்டம் தோல்வி அடைந்து விட்டதை அடுத்து, பஞ்சாப் பக்கம் பாஜக தனது குறியை வைத்துள்ளது. என்ன செய்தாலும் பாஜக எதிர்பார்த்தது நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக ஆம் ஆத்மியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சர் ஹர்பால் சீமா கூறுகையில், “பாஜக மூத்தத் தலைவர்களை சந்திக்க டெல்லிக்கு வரும்படியும், கட்சி மாறுவதற்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாகவும் பாஜக நிர்வாகிகள் அணுகினர்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.