மோகனன் பள்ளி மதமாற்றம் விவகாரம்: ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பித்தது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!

சென்னை: ராயப்பேட்டை சிஎஸ்ஐ மோகனன் பள்ளி மதமாற்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தமிழகஅரசு தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  85பக்கம் கொண்ட அறிக்கையியில் மதமாற்றம் தொடர் பான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் சி.எஸ்.ஐ. மோகனன் மகளிர் பள்ளி விடுதியில், தங்கி படித்துவரும் ஏழை மாணாக்கர்களிடம் மதமாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து 24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் தலைமைச் செயலாளருக்கும், தமிழக டி.ஜி.பி.க்கும் கடிதம் எழுதி இருந்தது.

முன்னதாக கடந்த 6ந்தேதி, இது தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. மோகனன் மகளிர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டதாகவும்,   ஏழைக் குடும்பங் களைச் சேர்ந்த சிறுமிகளை விடுதிக்கு அழைத்து வந்து, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது தெரிய வந்துள்ளது என்றும், அந்தப் பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதாகவும், அவர்களை உடனே மீட்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த சிறுமிகளுக்கு விடுதி வார்டனால் தொல்லை அளிக்கப்பட்டு வருகிறது என்பதால், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை 24மணி நேரத்தில் மீட்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதனால், அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்த தமிழகஅரசு,  சம்மந்தப்பட்ட ராயப்பேட்டை மோகனன் பள்ளியில் மதமாற்ற முயற்சி ஏதும் கண்டறியப்படவில்லை என்று பதில் அளித்தது.

இந்த நிலையில், மதமாற்றம் தொடர்பாக ஆய்வு நடத்திய  தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெய்குமார் ஆகியோர்,  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து, அங்கு  ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தனர். சுமார் 85 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில்,  அந்த விடுதி  பதிவு செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிகாட்டி உள்ளதுடன், பல்வேறு தகவல்களையும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆளுநருக்கும், அரசுக்கும் இடையில் மோதல் நிலவி வரும் நிலையில், மாநில அரசின் கருத்துக்கு எதிராக, ஆளுநரிடமே குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக அறிக்கையைச் சமர்ப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயப்பேட்டை சிஎஸ்ஐ மோகனன் பள்ளியில் மதமாற்றம்! 24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழகஅரசுக்கு உத்தரவு…

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.