பட்டியலின பள்ளி குழந்தைகளிடம் பாகுபாடு; தின்பண்டம் தர மறுத்த 5 பேரும் 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை: நெல்லை வன்கொடுமை தடுப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெல்லை: பட்டியலின பள்ளி குழந்தைகளுக்கு கடையில் தின்பண்டம் தர மறுத்த விவகாரத்தில் சிக்கிய 5 பேரும் 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து நெல்லை வன்கொடுமை தடுப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பளித்தது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை அடுத்த பாஞ்சாங்குளத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் கடை நடத்தி வந்தனர். அந்தக் கடையில் தின்பண்டங்கள் வாங்கச் சென்ற பட்டியலின மாணவர்களுக்கு, ஊர் கட்டுப்பாட்டின் அடிப்படையில், தின்பண்டம் கொடுக்க முடியாது என்று வியாபாரிகள் மறுத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து ராமச்சந்திர மூர்த்தி, மகேஷ்வரன், குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் முருகன், சுதா ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகர்க் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர், நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், ஏற்கனவே வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

எனவே 5 பேரும் ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி பத்மநாதன், பட்டியலின பள்ளிக் குழந்தைகளுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த வியாபாரிகள் உள்பட 5 பேரையும் குற்றவாளிகள் என தீர்மானித்து, அவர்கள் 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.