சென்னை திரும்பும் 'பொன்னியின் செல்வன்' குழு

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம், இந்த வாரம் செப்டம்பர் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

சென்னையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட இசை வெளியீட்டு நிகழ்விற்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளியை விட்டார்கள். அதன்பின் திருவனந்தபுரம், பெங்களூரூ, ஐதராபாத், மும்பை, டில்லி ஆகிய ஊர்களுக்குச் சென்று படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினார்கள். அனைத்து ஊர்களுக்கும் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா கண்டிப்பாக இருந்தார்கள். இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா, சரத்குமார் ஆகியோர் சில இடங்களில் மட்டும் கலந்து கொண்டார்கள்.

படக்குழுவின் சுற்றுப் பயணத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. சில தினங்களுக்கு முன்பு படத்திற்கான முன்பதிவுகள் ஆரம்பமாகின. தமிழ் சினிமா இதுவரை கண்டிராத அளவிற்கு அதிகாலை காட்சிகள் உட்பட வார இறுதி நாட்கள் வரையிலும் பெரும்பாலான தியேட்டர்களில் முன்பதிவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழைப் போலவே மற்ற மொழிகளிலும் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வெளிநாடுகளிலும் குறிப்பாக அமெரிக்காவில் படத்திற்கான முன்பதிவு சிறப்பாக உள்ளதாக படத்தை வெளியிடும் வினியோக நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் நாள் வசூலில் இப்படம் புதிய சாதனை படைக்கும் எனத் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.