தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேட்டில் மோசடி: திருப்பூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் பணியிடை நீக்கம்

திருப்பூர்: தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேட்டில் குளறுபடி செய்த திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலரை, மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார்பாடி பணியிடை நீக்கம் செய்தார்.

திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வருகை பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை (56) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடுகள் செய்து வருவதாக, மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து நடந்த விசாரணையின் அடிப்படையில், 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சையை, மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார்.

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி கூறியது: “திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை தூய்மைப் பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு செய்து வருவதாகவும், வராத பணியாளர்கள் வேலைக்கு வந்ததாக அதில் பதிவிட்டு முறைகேடு செய்ததாகவும் வந்த புகாரின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிந்த பின்னர் முறைகேடுகளுக்கு ஏற்ப துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.