தமிழ்நாடு அரசு கலைப்பு?; பாஜக பகீர் ஆலோசனை!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்காக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் அனுமதி வழங்குமாறு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் விண்ணப்பித்து இருந்தனர்.

ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறை சார்பில் அனுமதி அளிக்கப்படாமல் இருந்ததால், அந்த அமைப்பைச் சேர்ந்த 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 22ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என, உத்தரவிட்டது. இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டபடி அக்டோபர் 2ம் தேதி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதால் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தும் அதேநாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மத நல்லிணக்க பேரணி நடத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டது.

இந்த பரபரப்பான சூழலில், அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ் நடத்துவதாக அறிவித்து இருந்த ஊர்வலத்துக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்த இருந்த மனித சங்கிலி பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில், மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்துள்ளது. இதற்கு எதிராக, முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியபடி உள்ளன.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழலில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் ஊர்வலகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாஜக விடுத்துள்ள பகீர் கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தனது டிவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை சரியில்லை என கூறி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ளது காவல் துறை. சட்டம் ஒழுங்கு மோசம் என காவல் துறையே ஒப்புக்கொள்கிறதா?

அப்படியானால் சட்ட பிரிவு 356யை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு இல்லாத மாநிலத்தின் அரசை கலைத்தால் என்ன?. இவ்வாறு பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் தனது டிவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.

ஏற்கனவே அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததை காரணம் காட்டி பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வமும் அதே கோரிக்கையை எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.