பிரதமர் மோடி வந்த ரயிலில் அடையாள குறியீடு; இத்தாலியை சேர்ந்த 4 பேர் அதிரடியாக சிக்கினர்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 31ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் ஏறி பயணித்தார். அவருடன் பொதுமக்கள், மாணவ மாணவிகளும் பயணம் செய்தனர்.

அதே சமயம் பிரதமர் மோடி பயணம் செய்யும் சில மணி நேரங்களுக்கு முன்பாக அவர் பயணிக்க திட்டமிட்டு இருந்த மெட்ரோ ரயிலின் வெளிப்பகுதியில் பெயிண்ட் அடிக்கப்பட்டு டிஏஎஸ் (TAS) என்ற ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடி பயணம் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக மெட்ரோ ரயிலில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்ததால் உடனடியாக பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

விசாரணையில் (TAS) என்றால் படமெடு (Take a Shot) என்று பொருள்படும் என்பதால், இதில் ஏதேனும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருக்கலாம் என்று பெரிதும் அஞ்சப்பட்டது.

இதை தொடர்ந்து பிரதமர் மோடி பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு குழுவுடன் இணைந்தும் தீவிர விசாரணை மேற்கொண்டது.

மேலும் மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணிப்பதற்கு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இருந்த நிலையில் உச்சகட்ட விசாரணைக்கு மற்றும் சோதனைக்கு பின் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார். ஆனாலும் பிரதமர் மோடி பயணித்த மெட்ரோ ரெயிலில் சர்ச்சைக்குரிய வகையில் எழுத்துக்களை எழுதிய சம்பவம் தொடர்பாக பிரதமர் சிறப்பு பாதுகாப்புக் குழு மற்றும் குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு குழு இணைந்து, அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இது போன்ற சம்பவங்கள் பிற மாநிலங்களிலும் நடந்துள்ளதா? என விசாரணை நடத்தினர். அப்போது கேரளா மற்றும் மகாராஷ்டிரா மெட்ரோ ரயிலில் இது போன்று சர்ச்சைக்குரிய வார்த்தைகளை சிலர் எழுதியது தெரிய வந்தது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் விசாரணையை முடுக்கிவிட்டபோது மெட்ரோ ரயிலில் சர்ச்சைக்குரிய விதமாக எழுதிய இத்தாலியை சேர்ந்த 4 பேரை போலீஸ் அடையாளம் கண்டது.

எனவே உடனடியாக அகமதாபாத்தில் பல்டி என்கிற நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த இத்தாலியர்கள் 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அனைவருமே மெட்ரோ ரயில்கள் மற்றும் பிற பொதுச்சொத்துக்களில் பெயிண்ட் அடித்து வாசகங்கள் எழுதும் சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்கள் என, தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பயணித்த மெட்ரோ ரயிலில் (TAS) என எழுதப்பட்டதற்கு அர்த்தம் என்ன? என அதிகாரிகள் விசாரித்தபோது (Take a Shot) டிஏஎஸ் என்பதை சிகரெட் புகைத்தல் என்கிற அர்த்தத்தில் எழுதினோம் என வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.