இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் மணிரத்னம் இருவரும் பிரமாண்டத்திற்குப் பெயர்போன இயக்குநர்கள். இன்று பான் இந்தியா என்று சொல்லப்படும் படங்களுக்கு 90-கள் காலகட்டத்திலே விதை போட்டவர்கள். இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் நடைபெற்ற ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் அமரர் கல்கியின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு திரைத்துறை சார்ந்த பலரும் தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
#PS1 Captivates.A quality Tamil historical film after years.#ManiRatnam Sir’s mastery in filmma’King’ proven yet again Hats off to @dop_ravivarman ‘s Picturesque depiction.@arrahman music-Riveting!Full 3hrs intrigues U for the sequel.Hail to the vast Army that made this epic!
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 5, 2022
அந்த வகையில் பிரமாண்டத்திற்குப் பெயர்போன இயக்குநரான ஷங்கர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார். அதில், “நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல தரமான தமிழ் வரலாற்றுத் திரைப்படம். திரைப்படம் எடுப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். ரவிவர்மனின் ஒளிப்பதிவு அற்புதம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அதிரச் செய்கிறது. படத்தின் மூன்று மணிநேரமும் சுவாரஸ்யமாக நகர்ந்து, இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.