நாசிக்: அதிகாலை வேளை; கண்டெய்னர் மீது மோதி தீப்பிடித்த சொகுசு பஸ்… 11 பேர் பரிதாப பலி!

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி இன்று அதிகாலையில் சொகுசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ் காலை 5 மணிக்கு எதிரில் வந்த கண்டெய்னர் லாரி ஒன்றுடன் மோதிக்கொண்டது. இதில் மோதிய வேகத்தில் சொகுசு பஸ்ஸில் டீசல் டேங்க் உடைந்து பஸ் தீப்பற்றிக்கொண்டது. பஸ் விபத்தில் சிக்கியபோது அதிலிருந்த பயணிகள் உறக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்களால் விபத்து ஏற்பட்டவுடன் சுதாரித்துக் கொண்டு வெளியில் வர முடியவில்லை. அதோடு கண்டெய்னருடன் மோதிக்கொண்ட வேகத்தில் அதிகமான பயணிகள் காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். பஸ்ஸில் ஏற்பட்ட தீ பல அடி உயரத்துக்கு எரிந்தது.

எரிந்து முடிந்த பஸ்

பஸ்ஸில் சிக்கிக்கொண்ட 11 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 38 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழப்புக்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட துணை கலெக்டர் பகவத் கூறுகையில், “பஸ் மும்பை நோக்கி வந்தபோது காலை 5.20 மணிக்கு புனே நோக்கிச் சென்ற லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.”

விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக நாசிக் துணை போலீஸ் கமிஷனர் அமோல் தெரிவித்திருக்கிறார். கேள்விப்பட்டதும் மாவட்ட ஆட்சித்தலைவர் கங்காதரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். தீ விபத்து நடந்த 10 நிமிடங்களில் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. உடனே மூன்று தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. உள்ளூர் மக்களும், போலீஸாரும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பஸ்ஸில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்தோ அல்லது எத்தனை பேர் உயிரிழந்தனர் என்றோ உறுதியான தகவல் கிடைக்கவில்லை. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.