“அண்ணா, அப்பா இல்லாத இடத்திலே, நான் உங்களை வைத்து பார்க்கிறேன்” – பொதுக்குழு கூட்டத்தில் கனிமொழி

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுக கட்சியின் தலைவராக மீண்டும் ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழியை நியமனம் செய்து ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், ராசா, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கலைஞர் கருணாநிதி- அண்ணா

அதைத் தொடர்ந்து, ஏற்புரை வழங்கிய கனிமொழி, “ராபின்சன் பூங்காவில் கட்சி தொடங்கியபோது அண்ணா, `நமது இயக்க செயல்பாடு பெரியாரின் மனதை ஆறுதல் படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்’ எனப் பேசினார். 1967-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது சுயமரியாதை திருமணம் சட்டப்பூர்வமாக்கியது, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தது தொடங்கி பெரியார் மெச்சக்கூடிய ஆட்சியாக உருவாக்கி காண்பித்தார்கள். அதைப் போல தலைவர் கலைஞர் தன் பதவி போனாலும் பரவாயில்லை, எனது கொள்கைகளை என்றும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என உறுதியாக இருந்தார்.

ஸ்டாலின்

கலைஞருக்குப் பிறகு தலைவர் ஸ்டாலின் அந்த வெற்றிடத்தை நிரப்பி தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இப்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியை சிதைக்க சனாதன சக்திகள் முயற்சிக்கின்றன. அண்ணா, அப்பா இல்லாத இடத்திலே நான் உங்களை வைத்து பார்க்கிறேன். உங்கள் வழியிலேயே நீங்கள் எடுத்து வைக்கும் அடியில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் போராட்டங்களில் என அத்தனையிலும் உங்கள் பின்னால் அணிவகுக்க தயாராக இருக்கிறேன்” எனப் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.