கஜினி-2வுக்காக மீண்டும் இணையும் சூர்யா-முருகதாஸ்?

ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியும் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு பற்றி வெளியிடாமல் இருக்கிறார். குறிப்பாக ஸ்பைடர், சர்க்கார், தர்பார் என முன்னணி ஹீரோக்களை வைத்து அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே பரபரப்பாக பேசப்பட்டாலும் கமர்சியலாக வெற்றியை பெறவில்லை என்பது ஏ.ஆர்.முருகதாஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. தர்பார் படத்தை தொடர்ந்து விஜய்க்கு அவர் கதை சொன்னதாகவும் அது விஜய்க்கு பிடிக்கவில்லை என்பதால் விஜய் அதை மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் அப்போது வெளியானது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சூர்யாவுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து பணியாற்ற உள்ளார் என்கிற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதிலும் 15 வருடங்களுக்கு முன்பு இவர்களது கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கஜினி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான், ஏ.ஆர் முருகதாஸ் சூர்யாவை வைத்து இயக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

சூர்யாவின் திரையுலக பயணத்தில் கஜினி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது மறுக்கமுடியாத உண்மை. அதேசமயம் அடுத்ததாக அவர்கள் இணைந்த ஏழாம் அறிவு படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததாலும் அதன்பிறகு முருகதாஸ் விஜய்யுடன் தொடர்ந்து பயணிக்க துவங்கியதாலும் இந்த கூட்டணியில் ஒரு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. இந்தநிலையில் கஜினி-2 மூலம் இவர்கள் மீண்டும் இருவரும் இணைய உள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.