உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்: தலைமை நீதிபதி யுயு லலித் பரிந்துரை

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டிஓய் சந்திரசூட் பெயரை, தற்போதைய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பரிந்துரை செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யுயு லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவரை தலைமை நீதிபதியாக இவருக்கு முன்பு இருந்த என்வி ரமணா பரிந்துரை செய்திருந்தார். வரும் நவம்பர் மாதம் 8 ம் தேதியுடன் யுயு லலித்தின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யும்படி மத்திய அரசு தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலிதிற்கு கடந்த வெள்ளிக்கிழமை (அக்.7) கடிதம் எழுதியிருந்தது.

பொதுவாக விதிமுறைப்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்கும்படி மத்திய அரசு கடிதம் எழுதும். பதவிக்காலம் முடிவதற்கு 28 மற்றும் 30 நாட்களுக்கு முன்பாக இதற்கு பதில் அளிக்கப்படும். மரபுபடி, பதவி மூப்பு அடிப்படையில் பதவிக்காலம் முடிவடையும் நீதிபதிக்கு அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதியே தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்படுவார்.

இந்த நிலையில், நவ. 8ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடையும் தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பெயரை பரிந்துரைத்துள்ளார். இதற்கான கடிதத்தை உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் முன்னிலையில் நீதிபதி டிஒய் சந்திரசூட்டிடம் தலைமை நீதிபதி யுயு லலித் இன்று காலை வழங்கினார்.

கடந்த 1998ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டிஒய் சந்திரசூட், 2013ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். யுயு லலித்தைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பொறுப்பேற்க உள்ளார். 2024ம் ஆண்டு நவ.10 வரை இவர் தலைமை நீதிபதியாக நீடிப்பார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.