கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்க கோரிய மனு! தமிழக அரசுக்கு உத்தரவு!

கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் விஜயன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து 1993ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது எனவும், முறையான கணக்கெடுப்பு நடத்தாமல், நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு அனுப்பி மீண்டும் பரிசீலிக்கலாம் எனவும் உத்தரவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, உரிய ஆதாரங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு முறையிட்ட போது, புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லை எனவும், நான்கு மாவட்டங்களில் உள்ள எட்டு ஊர்கள் குறித்த விவரங்கள் மட்டுமே மாதிரியாக வழங்கப்பட்டுள்ளதால் இதை உண்மை விவரங்களாக எடுத்துக் கொண்டு பரிந்துரைக்க முடியாது எனவும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தெரிவித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்படவில்லை எனவும், இந்து வன்னியரை விட, கிறிஸ்தவ வன்னியர்கள் சமூக, பொருளாதார அடிப்படையில் நல்ல நிலையில் இல்லை என்பதால் கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.