கோவை மாவட்டத்தில் பேருந்தில் ஏற முயன்ற கல்லூரி மாணவரை அறிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கணபதி காமராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் சரவணவேல்(18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சரவணவேல், தனது கல்லூரி நண்பரான தேவா என்பவருடன் கணபதி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்த்தில் ஒன்றில் இவர்கள் ஏற முயன்ற போது, பேருந்தில் வந்த 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சரவணவேல் மற்றும் அவரது நண்பர் தேவாவை பேருந்தில் ஏற விடாமல் கீழே தள்ளி உள்ளனர். இதனால் இவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் 6 பேரும் சேர்ந்து சரவணன் வேலை தாக்கினர். இதனைப் பார்த்த தேவா அவர்களை தடுக்க முயன்றதால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் தேவாவை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதையடுத்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார், வழக்குப்பதிவு செய்து தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.