காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில் மழையில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்; ஏலம்விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் வீணாகி வருகிறது. இந்த வாகனங்களை ஏலம்விட்டு அரசுக்கு வருவாய் ஈட்டலாம் என சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், விபத்துகளில் சிக்கும் வாகனங்கள் மற்றும் நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்ட வாகனங்கள் என அனைத்தும் காஞ்சிபுரம் திருவீதி பள்ளம் பகுதியில் தாலுகா  காவல் நிலையம் அருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்து நிறுத்தி வைத்துள்ளனர். இவ்வாறு 2 ஆண்டுக்கும் மேலாக பறிமுதல் வாகனங்களான கார், வேன், மாட்டு வண்டிகள்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு இல்லாமலும் திறந்தவெளியிலும் நிறுத்தப்பட்டு இருப்பதால் வெயிலிலும் மழையிலும் துருப்பிடித்து வீணாகி வருகிறது. மேலும் வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடத்தை சுற்றிலும் முட்செடி வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறையாக பராமரித்து வழக்குகள் முடிந்தபின் உரியவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் அல்லது ஏலம் விடவேண்டும்.

வழக்கு நிலுவையில் இருப்பதால், வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்காமல் குப்பைபோல் குவித்து வைத்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு வாகனங்கள் மக்கி, மண்ணோடு மண்ணாகி  வருகிறது. ஒருசில வாகனங்களின் டயர், சக்கரங்கள், இன்ஜின் போன்றவற்றை சமூகவிரோதிகள் திருடி விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது.  இதை போலீசார் கண்காணிக்காததால் வாகனங்களின் உதிரிபாகங்கள் திருடுபோவதாக உரிமையாளர்கள்  குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பறிமுதல் வாகனங்களின் வழக்குகளை விரைந்து முடித்து குறிப்பிட்ட காலஇடைவெளியில் உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் அல்லது ஏலம்விட்டு அரசுக்கு வருவாய் ஈட்டவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.