நெல்லை: தமிழக சட்டப்பேரவை வருகிற 17ம் தேதி கூடும் நிலையில் இபிஎஸ், ஒபிஎஸ் கடிதம் தொடர்பாக, படித்து பார்த்து நியாயமான முறையில் முடிவு எடுக்கப்படும் என நெல்லையில் நடந்த விழாவில் தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை வருகிற 17ம் தேதி கூடுகிறது. இந் நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான தன்னைக் கேட்டுத் தான் முடிவுகள் எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் சட்டப்பேரவையில் கடிதம் அளித்துள்ளார். அதேபோன்று இபிஎஸ், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்றும், சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் கடிதம் அளித்துள்ளார்.
இந்த இருவரின் கடிதங்களால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம், களக்காட்டில் ரூ.6.25 கோடி மதிப்பில் வாழை ஏலம் மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார். அப்போது, இபிஎஸ், ஓபிஎஸ் அளித்துள்ள கடிதங்கள் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, ‘‘அவர்கள் கடிதத்தை இன்னும் நான் படித்துப் பார்க்கவில்லை. சென்னை சென்ற பிறகு அந்தக் கடிதங்களை படித்துப் பார்த்து இந்தப் பிரச்னையில் நியாயமான முடிவு எடுக்கப்படும்’’. இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார். சட்டசபை கூடுவதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு, அதிமுகவினர் மத்தியில் உருவாகியுள்ளது.