புதுடெல்லி / பெர்ன்: சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் அடங்கிய 4-வது கட்ட பட்டியலை இந்தியா பெற்றுள்ளது. ஆண்டுதோறும் சுவிஸ் வங்கி தகவல்களை தாமாக முன்வந்து பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த தகவல்இந்தியாவுக்கு வழங்கப்பட்டுஉள்ளது.
மொத்தம் 101 நாடுகளைச் சேர்ந்த 34 லட்சம் நிதி கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து 4-வது கட்ட பட்டியலில் பகிர்ந்துகொண்டுள்ளது. இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் வரி செலுத்துவதில் இருந்துதப்பித்து சுவிஸ் வங்கிகளில் சட்டவிரோதமாக கோடிக்கணக்கான பணத்தை பதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், சுவிஸ் வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர் களின் விவரங்களை தர வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று சுவிஸ் வங்கி ஆண்டுதோறும் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியா தற்போது பெற்றுள்ள 4-வது கட்ட பட்டியலில், பல அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள், தனிநபர் சார்ந்த நூற்றுக்கணக்கான கணக்குகளும் அடக்கம்.
விசாரணையை பாதிக்கலாம் என்பதால் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களை அரசு பகிரங்கமாக வெளியிடவில்லை. சுவிஸ் வங்கியில் கருப்புபணம் பதுக்கியுள்ள அடுத்த கட்ட பட்டியல், 2023 செப்டம்பர் மாதம் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.
2019 செப்டம்பரில் தான், சுவிஸ் வங்கிகளிடமிருந்து முதல் பட்டியலை இந்தியா பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.