தீபாவளி நெருங்குவதால் சந்தைகளில் களைகட்டும் வியாபாரம்: ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

ஈரோடு : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் முக்கிய சந்தைகளில் வியாபாரம் களைகட்டும் நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனாவிற்கு முந்தைய உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தீபாவளிக்கு 2 வாரங்களே இருக்கும் நிலையில் தென்இந்தியளவில் பிரபலமான ஈரோடு செவ்வாய் ஜவுளி சந்தையில் வியாபாரம் சூடுபிடித்திருக்கிறது. குறிப்பாக, மொத்த விற்பனையை விட சில்லறை விற்பனை அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றன.

உள்ளூர் தயாரிப்புகளுடன் பெங்களூர், கொல்கத்தா, சூரத், மும்பை நகரங்களில் இருந்தும் புது வகை ஆடைகள் விற்பனைக்காக குவிந்துள்ளன. வியாபாரிகள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து வந்து இருந்த மக்களும் ஆர்வத்துடன் தங்களுக்கு தேவையான ஜவுளி ரகங்களை வாங்கி சென்றனர். நூல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றல் ஜவுளி ரகங்களின் விலை உயர்ந்திருப்பதாக கூறும் வியாபாரிகள் அதன் காரணமாகவே மொத்த வியாபாரத்தில் சுணக்கம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இருப்பினும் அடுத்த 2 வாரங்களில் விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் ஈரோடு ஜவுளி வியாபாரிகள் கூறியுள்ளனர்.     

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.