நாக்கை அறுப்பதாகப் பேசிய மதுரை மாவட்ட பாஜக தலைவரை அக். 17 வரை கைது செய்யத் தடை 

மதுரை : இந்து மதத்துக்கு எதிராகப் பேசுபவர்களின் நாக்கை அறுக்க அஞ்சமாட்டோம் என பேசிய மதுரை மாவட்ட பாஜக தலைவரை அக். 17 வரை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மேகாலயா ஆளுனர் இல.கணேசன் உடல் நலம் பெற வேண்டி மதுரையில் உள்ள கோயில் ஒன்றில் மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் சமீபத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மகா சுசீந்திரன், ‘இந்து மதத்துக்கு எதிராக பேசும் திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி, ஆ.ராசா போன்றவர்கள் நித்தியானந்தா போல் தனி நாடு தொடங்கி கருத்து தெரிவிக்கலாம். இந்து மக்களையும், இந்து தேசத்தையும் பிரிக்கும் தீய சக்திகளின் நாக்கை வெட்டுவதற்கு அஞ்ச மாட்டோம்’ என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மகா சுசீந்திரன் மீது சிலைமான் போலீஸார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மகா சுசீந்திரன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி நக்கீரன் விசாரித்தார்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னிற்கு பிரதமர் மோடி வருவதற்கு வாய்ப்புள்ளது. அந்த நிகழ்வில் மனுதாரர் பங்கேற்க வேண்டும். எனவே, அதுவரை மனுதாரரை கைது செய்யக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 17-க்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை மகா சுசீந்திரனை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.