நெருங்கும் தீபாவளி பண்டிகை!: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும்.. அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவிப்பு..!!

டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் முக்கியமான பண்டிகையான தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் விமர்சையாக வருடாவருடம் கொண்டாடப்படும். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் ஒன்றிய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. ஒன்றிய அமைச்சரவை கூட்டத்துக்கு பின் அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு அறிவித்தார்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.72,000 கோடி ஒரே தவணையாக மானியமாக வழங்கப்படும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11,27,000 ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். போனஸ் வழங்குவதன் காரணமாக ரயில்வேக்கு ரூ.1,732 கோடி செலவாகும் என அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். அதிகபட்சமாக ஒரு ரயில்வே ஊழியருக்கு ரூ.17,951 போனஸாக கிடைக்கும். ஒன்றிய அரசின் இத்தகைய அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2021ம் ஆண்டிலும் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.