பணிகள் நடைபெறும்போதே இடிந்து விழுந்த கழிவுநீர் கால்வாய்.. அப்போனா! அந்த ரூ80 லட்சம் செலவு?

ஆம்பூர் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாய் ஆனது, பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது இடிந்து விழுந்த அவலம் அரங்கேறியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 14, 20 மற்றும் 21வது வார்டு பகுதிகளில் தார்ச் சாலையுடன் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்காக சுமார் 88 லட்சம் ரூபாய் நகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீ.ஏ.கரீம் சாலை, வளையல்காரர் சாலை வழியாக செல்லக் கூடிய கழிவுநீர் கால்வாயில் 20 நாட்களுக்கு மேலாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திடீரென இன்று சுமார் 40 மீட்டர் அளவிற்கு கழிவுநீர் கால்வாய் திடீரென இடிந்து விழுந்துள்ளது
image
இது குறித்து பேசிய அப்பகுதியில் வசித்து வரும் குட்டி உதயக்குமார், “மற்ற பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரை வளையல் காரர் தெரு வழியாக திருப்பி விடுவதற்கான கழிவுநீர் கால்வாய் பணிகள் கடந்த 20 நாட்களாக இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. போதுமான அளவு சிமெண்ட் பயன்படுத்தாமல், தரமற்ற கட்டுமானப் பொருட்களை கொண்டு பணிகள் நடைபெற்று வந்ததால் இதுபோன்று விபத்து நடைபெற்றுள்ளது. பலமுறை பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது இதற்கு முக்கிய காரணம்” என்று தெரிவித்தார்.
image
இதையடுத்து அப்பகுதிக்கு இடிந்து விழுந்த கழிவுநீர் கால்வாய் கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்த ஜேசிபி எந்திரம் கொண்டு வந்த ஆம்பூர் நகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
image
இது குறித்து நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் அவர்களிடம் கேட்டபோது, “20வது வார்டு பகுதியில் இப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இடிந்து விழுந்த கழிவுநீர் கால்வாய் பணிகளை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டுள்ளோம். மேலும் இடிபாட்டு பொருட்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்தி விட்டு பணிகள் மீண்டும் உடனடியாக தொடங்கப்படும்” என தெரிவித்தார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.