புனித் நினைவு நாளில் ரிலீஸாகும் `கந்தட குடி'; பயோபிக் படத்துக்கும் ஆயத்தமாகும் கன்னட திரையுலகம்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகியும் அந்த துக்கத்தில் இருந்து  மீளமுடியாமல் இருக்கிறது கன்னட சினிமா. அவ்வப்போது தரமான படைப்புகளைக் கொடுக்கும் கன்னட சினிமாவிலிருந்து இப்போது அடுத்தடுத்து நல்ல நல்ல படைப்புகள் வந்துகொண்டிருக்கிறது. `இதைக் காண எங்கள் அப்பு இல்லையே !’ என புனித்தை எண்ணாத படைப்பாளிகள் இல்லை. 

புனித் ராஜ்குமார் இருக்கும்போது நடித்த படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று ‘ஜேம்ஸ்’. இந்தப் படத்திலேயே ஒரு சில காட்சிகளில் அவரை கிராஃபிக்ஸில் கொண்டு வந்திருப்பார்கள். தவிர, இதில் புனித்திற்கு டப்பிங் பேசியது அவரது அண்ணன் சிவராஜ்குமார்தான். பக்கா ஆக்‌ஷன் படமாக வெளியான ‘ஜேம்ஸ்’ முடியும்போது பயங்கர எமோஷனலாக இருக்கும். காரணம், புனித் கடந்து வந்த பாதை, சினிமாவில் அவருடைய பங்களிப்பு, அவர் செய்த சமூக பணிகள் என புனித்தின் நினைவுகளை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கண் கலங்கும். அந்த ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தை புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளான மார்ச் 17ம் தேதி வெளியிட்டனர்.   

‘லக்கி மேன்’ படத்தில் புனித் ராஜ்குமார்

‘ஜேம்ஸ்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கையில் ‘லக்கி மேன்’ என்ற மற்றொரு படத்திலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார், புனித் ராஜ்குமார். ‘ஓ மை கடவுளே’ படத்தின் கன்னட ரீமேக். தமிழில் விஜய் சேதுபதி நடித்திருந்த கடவுள் கதாபாத்திரத்தில் கன்னடத்தில் புனித் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தங்கள் ஆதர்ச நாயகன் புனித்தை மீண்டும் திரையில் காண அவரது ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர்.

 ‘Wild Karnataka’ என்ற ஆவணப்படத்தைப் பார்த்துவிட்டு பயங்கரமாக இம்ப்ரஸான புனித், அதன் இயக்குநர் அமோகவர்ஷாவுடன் இணைந்து கர்நாடக கடல் பகுதியைப் பற்றிய ஆவணப்படம் எடுக்க பேச்சு வார்த்தை நடத்தினார். அதனை தானே தயாரிப்பதாகவும் கூறி அந்த புராஜெக்ட் ஆரம்பமானது. புனித் அவருடன் சென்று கர்நாடகாவில் உள்ள வனப்பகுதிகளுக்கும் கடல் பகுதிகளுக்கும் சென்று ஆவணப்படமாக எடுத்தனர். அதனை தன் கனவாக வைத்திருந்தார் புனித். அந்த ஆவணப்படத்திற்கு ‘கந்தட குடி’ எனப் பெயரிட்டனர். ஏற்கெனவே,  ‘கந்தட குடி’ என்ற பெயரில் ராஜ்குமாரின் படமொன்று 1973ல் வெளியானது. வனப்பகுதிகளையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திய முதல் இந்திய திரைப்படம் இதுதானாம். ராஜ்குமார் இதில் வனத்துறை அதிகாரியாக நடித்திருப்பார். படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 

புனித் ராஜ்குமார்

இதனைத் தொடர்ந்து, 1994ல் சிவராஜ்குமார்  ‘கந்தட குடி 2’ என்ற பெயரில் ஒரு அட்வெஞ்சர் படமொன்றில் நடித்தார். இந்த இரு படங்களின் சென்டிமென்ட் காரணமாக, இந்த ஆவணப்படத்திற்கு  ‘கந்தட குடி’ என்றே பெயரிட்டிருந்தனர். புனித் ராஜ்குமாரின் கனவு படமான இந்த ஆவணப்படத்தை வரும் அக்டோபர் 28ம் தேதி தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அக்டோபர் 29ம் தேதி புனித் ராஜ்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

புனித் உயிருடன் இல்லையென்றாலும் அவர் நடித்த புது படங்கள் இன்னும் திரையரங்குகளை அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு கன்னட சினிமா ரசிகருக்குள்ளும் புனித் என்றும் இருப்பார். சில மாதங்களுக்கு முன், இயக்குநர் சந்தோஷ் ஆனந்த் ராமை ட்விட்டரில் டேக் செய்து, புனித் ராஜ்குமாரின் பயோபிக் எடுக்க சொல்லி அவரது ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

அதற்கு அவரும் ‘I will try my level best to bring this idea on screen’  என்று ட்வீட் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் கரியரில் முக்கிய படமான ‘ராஜகுமாரா’ படத்தையும் இயக்கியவர் இவர்தான். புனித் ராஜ்குமாரின் இடம் அது அவருக்கு மட்டும்தான். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.