டிடிவி தினகரனுடன் கூட்டணியா?… ஜெயக்குமார் விளக்கம்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர் கல்வி மன்றம் வளாகத்தில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 17ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதற்கு அனுமதி கேட்டு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்ம் “ தீய சக்தி என்ற கருணாநிதி குடும்பத்திலிருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற வகையில் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்று 51ஆம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் வரும் 17ஆம் தேதி 9 மணி அளவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்த உள்ளார்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக கொடிக்கம்பங்களுக்கு வர்ணம் அடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உயர் கல்வி வளாகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்த முடியாத நிலையை இந்த விடியா அரசு பூட்டு போட்டு ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சார்பில் நாங்கள் அதை பராமரித்துக்கொள்கிறோம் என்று அனுமதி கேட்டும் அனுமதி அளிக்கவில்லை. வரும் 17ஆம் தேதி  அதிமுக சார்பில் ஜெயலலிதாவுக்கு மாலை அணிவிக்க அனுமதி அளிக்க வேண்டும் மற்றும் அதை சரி பண்ணிக் கொடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை பொறியாளரை சந்திப்பதற்காக வந்தேன்.

ஆனால் அவரை என்னாலேயே சந்திக்க முடியவில்லை. அப்படி இருக்கும்பொழுது பொதுமக்கள் எப்படி சந்திக்க முடியும். 12 மணிக்கு  சந்திக்க நேரம் ஒதுக்கிவிட்டு தற்போதுவரையிலும்  அவர் வரவில்லை. அண்ணாமலை ஆயிரம் சொல்லட்டும் அவருடைய கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக அவர் அப்படி சொல்கிறார். எந்த கட்சியாக இருந்தாலும் சரி அவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தவே பார்ப்பார்கள். அதை தப்பு சொல்ல முடியாது.

 மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக சொல்கிறார்கள், ஆனால் அது முடியவில்லை. சென்னையின் மேயர் பிறர் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக இருக்கிறார். அதனால்தான் 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறுகிறார். தகுந்த நேரத்தில் பணிகளை மேற்கொள்ளாமல் இறுதி நேரத்தில் அவசர கதியில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மழைக்காலத்தில் சென்னைக்கு பெரும் ஆபத்து வரக்கூடும்.

சட்டப்பேரவையில் ஓபிஎஸ் தரப்புக்கு இடம் ஒதுக்கும் விவகாரத்தில் சபாநாயகர் சட்டவிதிப்படி நடந்துகொள்ள வேண்டும். ஓபிஎஸ்ஸிடம் கட்சியும் இல்லை, அவரும் கட்சியில் இ ல்லை. பிறகு எப்படி அவர் அதிமுக வரிசையில் அமர முடியும். அவருக்கு வேறு எங்காவது இடம் ஒதுக்கட்டும்.

திமுகவை வீழ்த்துவதற்காகக்கூட டிடிவி தினகரனை அதிமுகவில் இணைத்துக்கொள்ள முடியாது. அவருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை. அதேபோல் அவருடன் இணைவதற்கு அவசியமே இல்லை, நாங்கள் இணையும் அளவுக்கு டிடிவி, சசிகலா பெரிய சக்தி இல்லை. டிடிவி தினகரன் வேண்டுமென்றால் சசிகலா மற்றும் ஓபிஎஸ்ஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ளட்டும்.அதிமுக மற்றும் தமிழக மக்களால் புறக்கணிப்பட்ட சக்திதான் சசிகலாவும், டிடிவி தினகரனும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.