தமிழகம் போட்ட விதை… வங்கத்தில் ஒலித்த இந்தி எதிர்ப்பு… உடன் சென்ற அண்ணாவும், கலைஞரும்!

எந்தவொரு மொழியாக இருந்தாலும் திணிப்பு என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கூறி இந்திக்கு எதிராக 1937ல் கொந்தளித்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது நீதிக்கட்சியும், தந்தை பெரியாரும். 85 ஆண்டுகளை கடந்த பின்னரும், இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகம் பற்ற வைத்த தீ படிப்படியாக பிற மாநிலங்களுக்கும் பரவி வருகிறது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கி மேற்குவங்கத்திற்கும் சென்றுள்ளது. அங்கு மிகப்பெரிய அளவில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தையும் உற்றுநோக்க வைத்திருக்கிறது. அதற்கு காரணம் அந்த போராட்டத்தில் அறிஞர் அண்ணாவும், மு.க.ஸ்டாலினும் உடன் சென்றது தான். என்ன சொல்கிறீர்கள்? அண்ணா எப்படி? ஸ்டாலின் அங்கு சென்றாரா? என்று கேட்காதீர்கள்.

இவர்களின் படங்களை கைகளில் ஏந்தி, இவர்கள் தந்த படிப்பினையை நெஞ்சில் ஏந்தி ஆவேச குரல் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தின் பங்களா போகோ என்ற அமைப்பினர் தான், இதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதன் பொதுச் செயலாளர் பேராசிரியர் கார்க்கா தலைமையில் திரண்ட மக்கள், மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

ஆயிரக்கணக்கானோர் திரண்டு மாபெரும் பேரணியை நடத்திக் காட்டி மிரள வைத்துள்ளனர். இதில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் படங்கள், அவர்களின் வாசகங்கள் வங்க மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதி அவற்றை பதாகைகளில் ஏந்தி குரல் எழுப்பிக் கொண்டே சென்றனர். இந்த பேரணியில் வங்கத்தை சேர்ந்த தமிழ் மக்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர வங்கத்தின் முக்கிய கவிஞர்களின் படங்களையும் ஏந்திச் சென்றனர். அப்போது மத்திய அரசு பணிகளிலும், தகவல் தொடர்பு விஷயங்களிலும் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை திணிப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகத் தலைவர்கள் பற்ற வைத்த தீ, வட இந்திய மாநிலத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

இது அப்படியே படர்ந்து கிளை விட்டு மற்ற மாநிலங்களுக்கும் பரவும் என்று சொல்லப்படுகிறது. இந்தி மொழி விஷயத்தில் தலைவர்களும், பொதுமக்களும் முன்வைக்கும் கருத்து இதுதான். எந்தவொரு மொழியையும் திணிப்பது நம்முடைய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அதுவும் உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி மட்டுமே பயிற்று மொழியாக வைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

தாய் மொழியை தவிர மற்ற மொழிகளையும் கற்க வேண்டும் என்று இளைய தலைமுறையை ஊக்குவிப்பது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறப்பான ஒன்று தான். ஆனால் ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதாக இருக்கக் கூடாது. தாய் மொழி உட்பட பல மொழிகளையும் அமல்படுத்துங்கள். இன்றைய இளைய தலைமுறை ஆக்கப்பூர்வமான முறையில் வளரும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.