திருமலை: ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்தில் 5 வருடங்களாக இயக்கப்பட்ட பஸ்களின் டீசல் இன்ஜினை மாற்றி முழு மின்சார பஸ்களாக இயக்கப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக திருப்பதி-காணிப்பாக்கம் இடையே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் டீசலில் இயங்கும் அரசு பஸ்களின் இன்ஜின்களை மாற்றி முழு மின்சார பஸ்சாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த ‘வீரவாஹனா’ என்ற பஸ் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 5 ஆண்டுகள் பழமையான டீசல் இன்ஜின் பஸ்களை தேர்ந்தெடுத்து மின்சார பஸ்களாக மாற்றப்படுகிறது.
மின்சார பஸ்சிற்கு ஏற்ப பஸ் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த மே மாத இறுதியில் திருப்பதி பணிமனைக்கு வந்த மின்சார பஸ், சாலையில் இயக்க தேவையான அனுமதி பெற்று பதிவு செய்யும் பணி முடிந்துள்ளது. சில மாற்றங்களுக்கு பிறகு இந்த இ-பஸ் பூதலப்பட்டு வழியாக திருப்பதி-காணிப்பாக்கம் வழித் தடத்தில் தற்போது சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது. திருப்பதி பணிமனையில் பஸ் சார்ஜிங் பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சின் செயல்பாடுகளை வைத்து படிப்படியாக டீசல் பஸ்களை மின்சார பஸ்சாக மாற்ற ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.