ஈரோடு மாவட்டத்தில் சரியாக படிக்காததை கண்டித்த தாயின் தலையில் கல்லைப் போட்டு 14 வயது மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சுங்கக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வன். இவரது மனைவி யுவராணி. இவர்களது மகன் சஞ்சய்(14) ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் சஞ்சய் சரியாக படிக்காததால் பெற்றோர் அவரை தனியார் பள்ளி ஹாஸ்டலில் சேர்த்தனர். இதையடுத்து சஞ்சய் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு வந்திருந்த நிலையில், சரியாக படிக்கவில்லை என்பதால் தாய் கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சஞ்சய் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த தாய் யுவராணி தலை மீது ஹாலோபிளாக் கல்லை போட்டு விட்டு தப்பி சென்றுள்ளான். இதில் பலத்த காயம் அடைந்த யுவராணி துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாய் தலைமீது கல்லை போட்டு கொன்ற மகன் சஞ்சையை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.