பயங்கரவாதிகளுடன் போரிட்ட மோப்ப நாய் ஜூம் உயிரிழந்தது| Dinamalar

புதுடில்லி ஜம்மு – காஷ்மீரில் சமீபத்தில் நடந்த மோதலின்போது இரண்டு பயங்கரவாதிகளை கொல்ல உதவிய, ‘ஜூம்’ என்று பெயரிடப்பட்ட ராணுவ நாய் நேற்று உயிரிழந்தது.

நம் ராணுவத்தின் ‘ஆப்பரேஷன் தாங்பாவா’ அதிரடிப் பிரிவில், ஜூம் என்று பெயரிடப்பட்ட நாய் பணியாற்றி வந்தது.

பெல்ஜிய ஷெபர்டு வகையைச் சேர்ந்த, 2 வயதான இந்த நாய், கடந்த எட்டு மாதங்களாக இந்தப் பிரிவில் பணியாற்றி வந்தது. இதற்கு பயங்கரவாதிகளை கண்டுபிடித்து, அவர்களை வீழ்த்துவதற்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் கோகர்நாக் பகுதியில், கடந்த 10ம் தேதி பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

இரண்டு பயங்கரவாதிகளை கண்டுபிடித்து, அவர்களை வெளியே இழுத்து வர, ஜூம் சண்டையிட்டது. அப்போது இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையிலும், பயங்கரவாதிகளை வெளியே வரவழைத்தது. அதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அவர்களை சுட்டுக் கொன்றனர்.

பலத்த காயமடைந்த ஜூம், புதுடில்லியில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தேறி வந்த நிலையில், நேற்று உயிரிழந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.