கீழப்புத்தூர் கிராமத்தில் பாம்பு கடித்த 7 வயது சிறுவன் பசவையாவை சிகிச்சைக்காக கே.வி.பி.புரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவன் பசவய்யாவின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக தனியார் ஆட்டோ மற்றும் பிற வாகனங்களின் வாகன உரிமையாளர்களை அணுகியுள்ளார். ஆனால் சிறுவனின் உடலை கொண்டு செல்ல அவர்கள் மறுத்ததை அடுத்து, சிறுவனின் தந்தை செஞ்சய்யா தனது மகனின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றார். மருத்துவமனையில் இருந்து தோளில் சுமந்து சென்ற தந்தையின் அவலநிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
பாம்பு கடித்து இறக்கும் சம்பவங்களை நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் வாயை வைத்து உடனடியாக ரத்தத்தை உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என்பது உட்பட பல முதலுதவி சிகிச்சைகள் வழக்கத்தில் உள்ளது. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை சரியானவை அல்ல. இவற்றால் நேரம் வீணாகி பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர் உயிரிழக்க நேரிடுகிறது.
பாம்பு கடித்த இடத்தில் கயிறு அலது துணியைக் கொண்டு இறுக்கமாக கட்டுவார்கள். அதனால் பலன் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், இறுக்கமாக கட்டப்பட்டிருந்த கட்டு பிரிக்கப்படும் பொழுது அந்த இடத்தில் இருந்து ரத்த ஓட்டம் அதிகமாகும்.
இதன் காரணமாக உடலின் பிற பகுதிகளுக்கும் ரத்தம் உடனே சென்று பாதிப்பு அதிகமாகும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். எனவே, ரத்த ஓட்டத்தைத் தடுக்க கட்டப்படும் கட்டு, மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது.
பாம்புக் கடிக்கு எதிராக வழங்கப்படும் மருந்து ஒன்றுதான் என்பது பலருக்கு தெரிவதில்லை. எனவே, அவர்கள் கடித்தது எந்த வகை பாம்பு என்று ஆராய்ச்சி செய்து நேரத்தை வீணடித்துவிடுகிறார்கள். முதலில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது தான் முக்கியமானது.
பாம்பு கடித்த உடல் பாகத்தின் அருகே உள்ள மோதிரம், வளையல், காப்பு, பிரேஸ்லெட் உள்ளிட்ட பொருட்களை உடனே அகற்றவும். பாம்பு கடித்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் இந்த ஆபரணங்களே அபாயம் ஏற்படுத்தும்