விருதுநகரில் வங்கியாளர்களின் சேவை மற்றும் பயனாளிகளின் பலன் குறித்த ஆய்வு கூட்டம் மத்திய அரசின் நிதி இணை அமைச்சர் பகவத் காரத் தலைமையில் நடந்தது. கூட்டத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பகவத் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவில் முன்னேற விழையும் மாவட்டங்கள் 112 உள்ளன. அதில், விருதுநகர் மாவட்டம் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது பெருமையளிக்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய அளவில் 1 லட்சம் பேருக்கு 14 வங்கி கிளைகள் உள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் 13 வங்கி கிளைகள் உள்ளன. எனவே உடனடியாக 15 வங்கிக் கிளைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 450 கிராம பஞ்சாயத்துக்களில் 111 பஞ்சாயத்துக்களில் 100 சதவிகிதம் பேர் வங்கிகளில் ஏதாவது ஒரு கணக்கு தொடங்கியுள்ளனர். மேலும் பிரதமரின் காப்பீட்டு திட்டம், பென்ஷன் திட்டம் உள்ளட்டவைகளிலும் இவர்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையையும் அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளேன். தெருவோர வியாபாரிகளின் தொழில் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஸ்வான்நிதி திட்டம் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பயனாளர்கள் பயன்பெறுகின்றனர். அதிகமானனோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே பயனாளர்கள் விகிதத்தை அதிகப்படுத்த அடுத்தடுத்த மாதங்களில் ஒவ்வொரு ஊர்களிலும் சிறப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் தேவையான இடங்களில் கூடுதலான வங்கிக் கிளைகள் தொடங்கவும் ஆலோசித்துள்ளோம். வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளுக்கு இணையாக, இந்தியாவும் விரைவில் இ-கரன்சிகளை அறிமுகம் செய்யவுள்ளது. முதற்கட்டமாக டிஜிட்டல் வங்கிகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளார். அதைத் தொடர்ந்து, டிஜிட்டல் கரன்சிகள் அறிமுகம் செய்யப்படும். உலக அளவில் பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இந்த வரிசையில் வல்லரசு நாடான இங்கிலாந்துகூட நமக்கு அடுத்த நிலையிலேயே உள்ளது. ஆகவே, வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது” என்றார்.