உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்: இந்த நாட்டில் மருத்துவ படிப்பை தொடரலாம்

புதுடெல்லி: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு விடிவெள்ளி தெரிகிறது. உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்றுக் கொண்டிருந்த  மாணவர்களுக்கு, தங்கள் கல்வியின் எதிர்காலம் தொடர்பாக ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, அவர்கள் தங்களது படிப்பைத் தொடர வாய்ப்பு கிடைக்கிறது. உக்ரைனில் இருந்து திரும்பிய 2000 இந்திய மாணவர்கள் எங்கே படிப்பார்கள்? இந்த கேள்விக்கான பதில் கிடைத்துள்ளது. உக்ரைனில் படித்து வந்த மாணவர்கள், இந்தியாவில் அல்ல, மற்றொரு வெளிநாட்டில் தங்கள் படிப்பை படித்து முடிப்பார்கள்.

மருத்துவ மாணவர்கள் உஸ்பெகிஸ்தானில் படிப்பை முடிப்பார்கள்

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய சுமார் 2000 மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க உஸ்பெகிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாற்றப்படுவார்கள். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான உஸ்பெகிஸ்தான் தூதர் தில்ஷோத் அகடோவ் இதனைத் தெரிவித்தார்.

சில மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக சேர்க்கை அட்டை

ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, ​​உஸ்பெகிஸ்தான் தூதுவர் தில்ஷோத் அகடோவ் சில மாணவர்களுக்கு தற்காலிக அனுமதி அட்டைகளை வழங்கினார். “உக்ரைனில் படிக்கும் சில இந்திய மாணவர்களை உஸ்பெகிஸ்தானில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை விசாரிக்க இந்திய கூட்டாளிகளிடமிருந்து சில கோரிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் எங்களுக்கு வந்துள்ளன” என்று அகடோவ் கூறினார்.

உஸ்பெகிஸ்தான் ஒரு பெரிய சர்வதேச கல்வி மையமாக உருவெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்திய அரசின் ’கங்கா’ திட்டம்

உக்ரைன் மீது, ரஷ்யா போர்த் தொடுத்ததைத் தொடர்ந்து, அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க இந்திய அரசு ஆபரேஷன் கங்காவைத் துவக்கியது. மொத்தம் 90 விமானங்கள் உதவியுடன் சுமார் 22 ஆயிரத்து 500 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டனர். உக்ரைனில் இருந்து மீட்டு, இந்தியாவுக்கு வந்தவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.

போர்க் களத்தில் இருந்து வெளியேறிய மாணவர்கள், உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்தவர்கள் ஆவர்கள். தாயகம் திரும்பியதில் இருந்து அவர்களின் கல்வி தொடர்பான கவலைகள் இதுவரை தீர்க்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.