உல்லாசத்தால் உச்சம் தொட்ட மோசடி ராணி… பொறியில் சிக்கிய அரசியல் எலிகள் – யார் அந்த பெண்?

ஒடிசாவின் சாதராண கிராமத்தில் இருந்து வந்து, தற்போது பல கோடிகளுக்கு அதிபதியான இளம்பெண் குறித்த பேச்சுக்கள்தான் நாடு முழுவதும் எழுந்துள்ளது. கடந்த அக். 6ஆம் தேதி மிரட்டி பணம் பறித்தல் குற்றத்திற்காக அந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கதையை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க உள்ளதாக பிரபல ஒடியா இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு சுவாரஸ்யமான கதைதான் அந்த 26 வயது இளம்பெண்ணின் வாழ்க்கை. 

அவர் குறித்த போலீசாரின் அறிக்கையில்,”அர்ச்சனா நாக் என்ற அந்த 26 வயது இளம்பெண், பணக்காரர்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் போன்றோரை தங்களின் பொறியில் சிக்க வைத்து, அவர்களை அந்தரங்கமாக புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துள்ளார். அவற்றை வைத்து அவர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணத்தை பறித்துள்ளார்”  என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள லஞ்சிகர் எனும் சிறு கிராமத்தில் அர்ச்சனா பிறந்துள்ளார். அவர், தனது தாயுடன் 2015ஆம் ஆண்டில் தலைநகர் புவனேஷ்வருக்கு குடிபெயர்ந்துள்ளார். 

தனியாக பாலியல் தொழில்

புவனேஷ்வர் வந்து ஆரம்ப காலத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிப்புரிந்ததாகவும், அதன்பிறகு பியூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பியூட்டி பார்லரில்தான் ஜகபந்து சந்த் என்பவருக்கும், அர்ச்சனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, 2018ஆம் ஆண்டில் இவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. 

அர்ச்சனா, பியூட்டி பார்லரில் பணியாற்றியபோது, தனியாக பாலியல் தொழிலையும் மேற்கொண்டு வந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அவரின் கணவர் ஜகபந்து, பழைய கார்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், அவருக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள் ஆகியோருடன் நல்ல பழக்கம் இருந்துள்ளது. 

அதிகாரமிக்கவர்களுடன் தொடர்பு 

இதைதொடர்ந்து, அர்ச்சனாவும், ஜகபந்துவும் எம்எல்ஏக்கள் உள்பட பல பிரபலங்களிடம் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து, தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளனர். தற்போது, ஒடிசாவில் பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இவைதான் என்பது தனிக்கதை.

பிரபலங்கள், அதிகாரமிக்கவர்கள் உடன் மிகவும் நெருக்கமாக இருந்த அர்ச்சனா, அவர்கள் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கவும் உதவிகரமாக இருந்துள்ளார். பெண்களுடன் அந்த பிரபலங்கள் உல்லாசமாக இருப்பதை அர்ச்சனா ரகசியமாக புகைப்படங்கள் எடுத்துள்ளார். அதை வைத்து அவர்களை மிரட்டி, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். 

அர்ச்சனா மீது திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அளித்த புகாரில், தான் மற்ற பெண்களுடன் இருக்கும் புகைப்படங்களை காட்டி, தன்னிடம் 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, தன்னை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாக ஒரு பெண்ணும் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, அர்ச்சனா கடந்த அக். 6ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். 

4 ஆண்டுகளில் மட்டும்…

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அர்ச்சனா – ஜகபந்து சந்த் ஜோடி, வெறும் 4 ஆண்டுகளில் (2018 – 2022) 30 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகளை வைத்துள்ளதாக போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், இவர்கள் மீது தற்போது 2 வழக்குகள் தான் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களால் பாதிக்கப்பட்டோர் தாமாக முன்வந்து புகார் அளித்தால் பல்வேறு குற்றங்கள் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, அவர்களின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்துவரும் போலீசார், பொருளாதார குற்றப்பிரிவின் விசாரணையை இந்த வழக்கில் கோரியுள்ளது. 

தொடர்ந்து, அர்ச்சனாவுக்கும், அவரின் கணவருக்கும் பல அரசியல்வாதிகளின் தொடர்புகளும் இருந்துள்ளன. அவர்களின் பின்புலத்தில் இந்த குற்றங்கள் நடைபெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

தப்பிக்க நினைக்கிறதா ஆளும் கட்சி?

இதில், ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்களுக்கு பெரும்பங்கு இருப்பதாகவும், இதனால் 22 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் நவீன் பட்நாயக் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேலும், 18 எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட மொத்தம் 25 அரசியல்வாதிகள் இதில் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் பெரும்பான்மையானவர்கள் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பாஜக தலைவர்களுள் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், ஆளும் கட்சி பிரமுகர்களை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. 

ஆனால், இதை முற்றிலுமாக மறுத்துள்ள ஆளும் கட்சி, அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என பதிலடி கொடுத்துள்ளது. இவ்வளவு அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய அர்ச்சனாவின் கதையை, பிரபல ஒடியா இயக்குநர் ஸ்ரீதர் மார்தா திரைப்படமாக எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.