குஜராத், ஹிமாச்சல் தேர்தல் தேதி அறிவிப்பு… சரியாக 3 மணிக்கு!

வட மாநிலங்களில் தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது. ஏனெனில் குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவுள்ளது. பிற்பகல் 3 மணியளவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அவர்கள் தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் முதல்வர் புபேந்திரபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 182 எம்.எல்.ஏக்கள் கொண்ட குஜராத் மாநிலத்தின் 14வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 18, 2023 உடன் நிறைவு பெறுகிறது. எனவே வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே மீண்டும் அக்கட்சியே ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, இடதுசாரி கட்சிகள், திரிணாமூல்
காங்கிரஸ்
என பலரும் களமிறங்கவுள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இதேபோல் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலும் முதல்வர் ஜெய் ராம் தாகூர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 68 எம்.எல்.ஏக்கள் கொண்ட ஹிமாச்சல் மாநில நடப்பு சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜனவரி 8, 2023ல் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தும் வகையில் இன்றைய தினம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இம்மாநிலத்தில் 1980க்கு பின்னர் காங்கிரஸ், பாஜக என மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளன. அடுத்தகட்டமாக ஆட்சி மாறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் என பலமுனைப் போட்டி நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.