சபாநாயகருக்கு பறந்த கடிதம்… சிக்கலில் தேனி எம்.பி ரவீந்திரநாத்!

தேனி பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் சொர்க்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மூத்த மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டத்தில் சோலார் வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி உயிரிழந்து கிடந்தது. இதையடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அந்த தோட்டத்தில் ஆட்டு மந்தை வைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் சிறுத்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரின ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இதன் தொடர்ச்சியாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக தோட்டத்தின் மேலாளர் தங்கவேல், ராஜவேல் ஆகியோர் கைதாகினர்.

இவர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் எம்.பி ரவீந்திரநாத் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பல்வேறு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சிறுத்தைகள் உயிரிழப்பில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தேனி திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று (அக்டோபர் 14) வனத்துறை அதிகாரி சமர்தாவை சந்தித்தார். அவரிடம் மனு ஒன்றை அளித்து, தேனி எம்.பி ரவீந்திரநாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்கட்டமாக விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

வருவாய்த் துறையில் கேட்டு விவரங்களை வாங்கினோம். அந்த உரிமையாளர்கள் மூன்று பேர். ஒருவர் எம்.பி ரவீந்திரநாத். மிச்சம் இரண்டு பேர். அந்த இரண்டு பேர் மீது நாங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறோம். எம்.பி மேல் நேரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது.

எனவே மக்களவை சபாநாயகருக்கு தகவல் தெரிவித்து விட்டு வழக்குப்பதிவு செய்வோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தங்க தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார். இதனால் எம்.பி ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? கைதாவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.