மக்கள் நலப் பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்க முடியுமா? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘மக்கள் நலப்பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்த முடியுமா?’ என்பதை கூறும்படி தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை கடந்த மாதம் 1ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘4 வார அவகாசத்துக்குள் பணியில் சேராத மக்கள் நலப் பணியாளர்கள் பணியில் சேரலாம்,’ என உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் நலப்பணியாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தற்போது வரை 489 பேர் பணியில் சேரவில்லை. தற்போது மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தான் பணி வழங்கப்பட்டுள்ளது. அதில் பணி பாதுகாப்பு இல்லை,’ என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் குமணன், ‘மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அது எதிர்காலத்திலும் தொடருமா? என்பது ஒன்றிய அரசின் முடிவில்தான் உள்ளது. தற்போது, தமிழக அரசின் நிதிநிலை காரணமாக, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.7,500 ஊதியம் வழங்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்தனர்.அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘மக்கள் நலப்பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்தவோ அல்லது பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளதா என்பது குறித்து தமிழக அரசு ஒரு கருத்தாக தெரிவிக்கலாம்,’ எனக் கூறி, விசாரணையை நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.