மாறப் போகும் மாதவரம்… பூமிக்கு அடியில் CMRL மெகா பிளான்- என்னா ஸ்பீடு தெரியுமா?

தலைநகர் சென்னையில் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே நீலவழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்களில் முதல்கட்ட திட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. அடுத்தகட்டமாக ஊதா வழித்தடம், காவி வழித்தடம், சிவப்பு வழித்தடம் என மூன்று வழித்தடங்களில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கியுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் (CMRL) இரண்டாம் கட்டத் திட்டத்தில் மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 2026ஆம் ஆண்டிற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதில் Corridor 3 எனப்படும் மூன்றாவது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

இதில் மாதவரம் அருகே சுரங்கப் பாதை பணிகளுக்கு முதல்வர்

நேற்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பணிகள் வேகமெடுத்துள்ளன. மாதவரம் பால் பண்ணை மெட்ரோ ரயில் நிலையமானது பூமிக்கு அடியில் சுரங்க ரயில் நிலையமாக அமையவுள்ளது. பூமியை துளையிடும் இயந்திரம் மூலம் 1.4 கிலோமீட்டர் தூரத்திற்கு துளையிட உள்ளனர். நாள் ஒன்றுக்கு 10 மீட்டர் ஆழத்திற்கு துளையிட திட்டமிட்டுள்ளனர்.

இதன்மூலம் 140 நாட்களில் 80 அடி ஆழத்திற்கு தோண்டுவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக பேசிய CMRL மேலாண் இயக்குநர் எம்.ஏ.சித்திக், துளையிடும் இயந்திரத்தின் வால் பகுதி மட்டும் 100 மீட்டர் நீளம் கொண்டது. இது முழுவதுமாக பூமிக்குள் நுழைந்து துளையிட்டு செல்லும். எப்படியும் மாதக்கணக்கில் ஆகிவிடும். இதன் தொடர்ச்சியாக இரண்டாவது துளையிடும் இயந்திரம் பணிகளை தொடங்கும்.

ரயில் நிலையத்தின் ஒருமுனைக்கு துளையிடும் இயந்திரம் சென்றவுடன் அப்படியே வெளியே எடுக்கப்பட்டு விடும். பின்னர் உட்பகுதி நன்றாக சீரமைக்கப்பட்டு மீண்டும் உள்ளே செலுத்தி துளையிடப்படும் என்றார். அடுத்தகட்டமாக கிரீன்வேஸ் ரோடு மெட்ரோவை பொறுத்தவரையில் வரும் நவம்பர் மாதம் பூமிக்குள் துளையிடும் பணிகள் தொடங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் இயக்குநர் டி.அர்ஜுனன் கூறுகையில், மூன்றாவது மெட்ரோ வழித்தடத்தில் மாதவரம் முதல் கெல்லீஸ் வரை மணல், வண்டல் மண், கடல் களிமண் உள்ளிட்டவற்றால் நிரம்பி காணப்படுகிறது. கெல்லீஸ் முதல் தரமணி வரை பாறை மண் இருக்கிறது. தரமணியில் ஆழமான பகுதியில் பாறைகள் உள்ளன. எனவே பணிகள் சற்று சவால் நிறைந்ததாக இருக்கக்கூடும். இருப்பினும் சிறப்பான முறையில் செய்து முடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.