திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் மலைப்பாதை வழியாக வாகனத்தில் வருகின்றனர். மலைப்பாதையில் விபத்துகளை தவிர்க்க திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு 28 நிமிடத்திலும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு 48 நிமிடங்களுக்கு குறையாமல் வாகனங்கள் செல்ல வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் வேக கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
தற்போது பாஸ்ட்ட்ராக் மூலம் சுங்க கட்டணம் வசூலிப்பதால் முன்புபோல் நேரம் கணக்கிடப்படுவதில்லை. இதனால் பல வாகனங்கள் அதிவேகமாக மலைப்பாதையில் செல்கிறது. இவ்வாறு செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. விபத்தை ஏற்படுத்தி விட்ட சில வாகனங்கள் மாயமாகிவிடுகிறது. இதை கண்டுபிடிக்க முடிவதில்லை. இதுபோன்று அதிவேகமாக சென்று விபத்துகளை ஏற்படுத்தும் வாகனங்களை கண்காணிக்கவும், மலைப்பாதையில் அடிக்கடி சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தையும் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அலிபிரியிலிருந்து திருமலைக்கு செல்லும் 18 கி.மீட்டர் தூரத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 5 கேமராக்கள் வீதம் 90 கேமராக்களும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் 12 கி.மீட்டர் தூர மலைப்பாதையில் 60 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. மலைப்பாதை வளைவுகள் மற்றும் அதிக தூரம் கவரக்கூடிய வகையில் கேமராக்களை பொருத்தி 24 மணி நேரம் கண்காணிக்கப்பட உள்ளது. அப்போது மலைப்பாதைகளில் வாகன விபத்து ஏற்பட்டாலோ? அல்லது வனவிலங்குகள் புகுந்தாலோ? உடனடியாக போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிெலன்ஸ் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து மீட்பு பணியில் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
ஏற்கனவே, திருமலை முழுவதும் 1,679 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு திருமலையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மலைப்பாதையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால் ஏழுமலையான் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அலிபிரி சோதனைச்சாவடியில் இருந்து திருமலைக்கு வந்து செல்பவர்களின் நடமாட்டம் அனைத்தும் கண்காணிப்பு கேமராவின் கீழ்க்கொண்டு வரப்பட உள்ளது என முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் தெரிவித்தார்.