உலக பொருளாதாரம் மந்தமான நிலையில் தீபாவளி பிஸ்னஸ் ரூ2.22 லட்சம் கோடி இலக்கு: ஆப்லைன், ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பு

டெல்லி: உலக பொருளாதாரம் மந்தமான நிலையில் இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளால் ரூ2,22,529 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக உலகப் பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரத்தில் ெபரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஒன்றிய அரசின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர்கள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளால் பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இருந்தாலும் உள்ளூர் பண்டிகைக் காலங்கள் அடுத்தடுத்து வருவதால் மக்களின் நுகர்வு அதிகரித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டாக பண்டிகைகள் கொண்டாடப்படாத நிலையில், இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால் மக்களின் நுகர்வு அதிகரித்துள்ளது. அதையடுத்து இந்தாண்டு தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.

இந்தாண்டின் இலக்கு 27 பில்லியன் டாலர் (ரூ2,22,529 கோடி) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கானது கடந்த 2019ம் ஆண்டு கொரோனா காலத்திற்கு முந்தைய காலகட்டத்தை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்; மேலும் கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகமாகும் என்று தொழில்துறையினர் வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.